புதுடெல்லி: சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த நிதின் கட்கரி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "இந்திய சாலை உள்கட்டமைப்பு ஏற்கெனவே மாறிவிட்டது. எனினும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான். படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலை உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும். இதை நீங்கள் காண்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் என்னிடம் பேசும்போது, இந்திய சாலை உள்கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாகக் கூறினார்கள்.