தெஹ்ரான்: ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் 1,000 பேர் வெளியேறுவதற்காக அந்நாட்டு அரசு வான்வெளியை திறந்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவானது. தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் கட்டிடத்தின் அடித்தளத்தில் தஞ்சம் அடைந்த சில இந்திய மாணவர்கள் தங்களை உடனடியாக மீட்கும்படி இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஈரானில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு இந்திய மாணவர்களை வெளியேற்ற இந்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதற்கட்டமாக ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையின் கீழ் ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். 110 இந்திய மாணவர்கள் நேற்று ஈரானில் இருந்து அர்மேனிய எல்லை வழியாக நாடு திரும்பினர். இந்நிலையில் ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் 1,000 பேர் வெளியேறுவதற்காக அந்நாட்டு அரசு வான்வெளியை திறந்துள்ளது.
இஸ்ரேல் உடனான போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடிய நிலையில் இந்தியாவின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏற்வேஸின் 3 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கோம் நகரம் வழியாக மஸ்சாத் நகருக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் இல்லாத நகரமான மஸ்சாத் வழியாக இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post இந்திய மாணவர்கள் வெளியேற வான்வெளியை திறந்தது ஈரான் அரசு: மகான் ஏற்வேஸின் 3 விமானங்கள் மூலம் 1000 மாணவர்களை அழைத்து வர திட்டம் appeared first on Dinakaran.