ராஜபாளையம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளார். இந்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து முழுமையான அளவு பங்கேற்போம். பாஜ ஆளும் மாநிலங்கள் தவிர எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து ஒன்றிய அரசு போட்டி அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்ததை உச்சநீதிமன்ற மூலம் தமிழக முதல்வர் தீர்வு கண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே இந்த தீர்ப்பு ஒரு முன்மாதிரியாக இருப்பது வரவேற்கத்தக்கது. பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு அரசு போராடி பெற்ற பல்வேறு திட்டங்களை நான்தான் கொண்டு வந்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். தற்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையும் நான்தான் போராடி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருவது வருந்தத்தக்கது. எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு, வக்பு பிரச்னை, தேசிய கல்விக் கொள்கை, மேலும் ரூ.8,512 கோடி கல்வி நிதி போன்றவற்றையும் கேட்டு பெற்று கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக இன்று முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.