இஸ்லாமாபாத்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் உரிமை உண்டு’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது.