திமுக அமைச்சர்களுக்கு இது போறாத காலம் போலிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை, நீதிமன்றக் கண்டிப்பு என திரும்பிய பக்கமெல்லாம் திமுக அமைச்சர்களுக்கு திகிலாய் இருக்கையில், ’எங்கள் மாவட்டத்துக்குள் வராதே’ என தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக-வினரே போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக தலைமையால் 2021-ல் அனுப்பிவைக்கப்பட்டார். கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே, “வேங்கையின் மைந்தன்” எனச் செல்லமாக அழைக்கும் எம்ஆர்கே பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை தருமபுரி மாவட்ட திமுக-வினர் அப்போது சிலாகித்து வரவேற்றனர். பொறுப்பு அமைச்சராகி முதல் முறையாக அவர் தருமபுரிக்கு வந்தபோது கொடுக்கப்பட்ட தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளே அதற்கு சாட்சி.