ராமேசுவரம்: உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் அரியவகை கடல்வாழ் பாலூட்டி இனமான கடல் பசுக்கள் காணப்படுகின்றன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். அதிகபட்சம் 4 மீட்டர் நீளம், ஆயிரம் கிலோ எடையுடன் காணப்படும். 70 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழக்கூடியது. இதற்கு முன்னங்கால்கள் போன்று தோற்றமளிக்கும் இரண்டு துடுப்புகள் இருக்கும். நாசித் துவாரம் பிறைச் சந்திரன் வடிவத்தில் உச்சந்தலையில் அமைந்திருக்கும்.