தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு சத்தமில்லாமல் முடுக்கி விட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இத்தனை நாட்களாய் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளின் விசாரணை வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் 2017 ஏப்ரலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. பங்களாவுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள், தடுக்க வந்த எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரையும் கொலை செய்தனர். ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் அதிமுக ஆட்சியிலேயே நடந்த இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.