பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இயற்கைக்கு மாறான வகையில் 11 பேர் மரணமடைந்ததாக தனித்தனியாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் போலீஸ் இதுவரை எஃப்ஐஆர் ஏதும் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், 11 பேரின் மரணத்தையும் இயற்கைக்கு மாறான மரணம் என்று தனித்தனியாக பெங்களூரு நகர போலீஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.