சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் புராண மற்றும் பக்திக் கதைகளே அதிகம் படமாக்கப்பட்டன. அந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதுபோன்ற படங்கள் அதிகமாக உருவாகின. அதில் மகாபாரதத்தின் கிளைக் கதைகளில் ஒன்றை எடுத்து உருவான படம், ‘கிராதா அர்ஜுனா’. இந்தப் படத்துக்கு ‘ஊர்வசி சாகசம்’ என்று இன்னொரு தலைப்பையும் வைத்தனர். இரண்டு தலைப்புகளுடன் வெளியான படம் இது. அந்த காலகட்டத்தில் சில படங்கள் இரண்டு தலைப்புகளுடன் வெளியாகி இருக்கின்றன.
அர்ச்சுனன் தன்மீது வைத்திருக்கும் பக்தியை, பார்வதி தேவிக்கு உணர்த்த விரும்பிய சிவன், அர்ச்சுனன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, கிராதா என்ற வேடனாக அங்கு செல்கிறார். அப்போது காட்டுப் பன்றி ஒன்று அர்ச்சுனனை நோக்கிப் பாய்ந்து வருவதைக் கண்ட வில் வீரரான அவர், அதை நோக்கி ஓர் அம்பு எய்கிறார். கிராதாவும் அம்பு எய்ய, காட்டுப் பன்றி இறக்கிறது. காட்டுப்பன்றி உருவத்தில் வந்தது, மூகாசுரன் என்ற அசுரன். காட்டுப்பன்றி இறந்ததும் அசுரன் தன் சுய உருவத்தைப் பெறுகிறான். இதற்கிடையே பன்றியைக் கொன்றது யார் என கிராதாவுக்கும் அர்ச்சுனனுக்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் கிராதா வெற்றி பெறுகிறார்.