சென்னை: ‘என்னை கணவனாக இல்லை, பொன் முட்டையிடும் வாத்து போலவே அவர் நடத்தினார். காதல் என்கிற பெயரில் என் பணம், சொத்து என எல்லாவற்றையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார்’ என ஆர்த்தி ரவி குறித்து நடிகர் ரவி மோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர்.