இதோ… மற்றும் ஒரு போர். ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான 'யுரேனியம் செறிவூட்டல்' பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான 'நடான்ஸ்", குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள், தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாய் இஸ்ரேல் நம்புகிறது; ஈரான் நாட்டின் அணு ஆயுத வலிமை, இஸ்ரேல் நாட்டின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கருதுகிறது. மிகவும் அவசியமான தற்காப்பு நடவடிக்கை என்று இத்தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.