துபாய்: ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், எண்ணெய் கிணறுகள், சேமிப்பு கிடங்குகள் பற்றி எரிகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. இரு தரப்பிலும் 3வது நாளாக தாக்குதல் தொடர்வதால் போர் உக்கிரமடைந்துள்ளது.
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அதன் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் போர் விமானங்களும், ஏவுகணைகளும் ஈரானின் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அணுசக்தி மையங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கு பதிலடியாக ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி ஏவியது. இந்த தாக்குதலில் சில குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், 3 பேர் பலியானதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்தது. இனியும் தாக்குதலை தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரையிலும் இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். 3வது நாளாக நீடித்த இந்த சண்டையில், ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உலகின் 2வது மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கான ஷாரன் சேமிப்பு கிடங்கில் ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்த பல மணி நேர போராட்டம் காரணமாக, எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கிடங்கில் இருந்து தான் உலகின் பல நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதே போல, சவுத் பார்ஸ் பீல்டில் உள்ள பர் ஜாம் எரிவாயு வயலும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதால் அங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தலைநகர் தெஹ்ரானிலம், நாட்டின் பிற பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டபடி இருந்தன. ஈரானின் பாதுகாப்பு அமைச்சகமும் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 3 நாள் சண்டையில் 20 குழந்தைகள் உட்பட 406 பேர் பலியானதாகவும், 654க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணு விஞ்ஞானிகள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவமும் இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் இரவிலிருந்து அதிகாலை வரையிலும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. டெல் அவிவ் அருகே உள்ள பேட் யாமில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஈரான் ஏவுகணை தாக்கியதில் 10 வயது மற்றும் 9 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். வடக்கு இஸ்ரேலில் உள்ள அரபு நகரமான தம்ராவில் ஒரு கட்டிடத்தை ஏவுகணை தாக்கியதில் 13 வயது சிறுவன் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். மத்திய நகரமான ரெஹோவோட்டில் நடந்த தாக்குதலில் 42 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலில் இதுவரை 14 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 380 பேர் காயமடைந்துள்ளனர்.
இருதரப்பிலும் நேற்று காலையிலும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்தன. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவிக்கப்படாத போர் உக்கிரமடைந்துள்ளது. இந்த மோதலை மேலும் தீவிரமாக்கக் கூடாது என சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளும் நேற்றும் வலியுறுத்தின. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அத்தகைய கோரிக்கைகளை நிராகரித்தார், ‘‘எதிர்வரும் நாட்களில் எங்கள் படைகள் நடத்த உள்ள தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இதுவரையிலான தாக்குதல்கள் ஒன்றுமில்லாதவை’’ என கூறி உள்ளார்.
இஸ்ரேல், ஈரான் மோதலால் 3ம் உலகப் போர் ஏற்படும் அபாயத்திற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ரே எக்ஸ் தளத்தில் ஈரானின் பார்சி மொழியில் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில், ‘‘ஈரானின் ராணுவ ஆயுத உற்பத்தி ஆலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும். மறு அறிவுப்பு வரும் வரை அவர்கள் திரும்பாமல் இருப்பது பாதுகாப்பானது’’ என கூறி உள்ளார். இது அடுத்ததாக இஸ்ரேல், ஈரானின் ராணுவ உற்பத்தி மையங்களை தாக்க இருப்பதை குறிக்கிறது.
இஸ்ரேல் நிறுத்தினால் நாங்கள் நிறுத்துவோம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெஹ்ரானில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேல் அதன் தாக்குதல்களை நிறுத்தினால், நாங்களும் எங்கள் பதிலடியை நிறுத்த தயாராக இருக்கிறோம். இந்த சண்டையில் அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு நிறைய உதவிகள் செய்வதற்கு வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே இந்த மோதலுக்கு அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.
அதானி துறைமுகம் சேதமடைந்ததா?
இஸ்ரேலில் உள்ள ஹைபா துறைமுகத்தை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், ஹைபா துறைமுகம் மீதும் அதன் அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஈரான் ஏவுகணை வீசி தாக்கியதில் சேதமடைந்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹைபா துறைமுகம் எந்த சேதமும் அடையவில்லை என்றும் சரக்கு நடவடிக்கைகள் தடையின்றி நடந்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘இந்தியா – பாகிஸ்தான் மாதிரி இந்த போரையும் நிறுத்துவேன்’
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘இந்தியாவும் பாகிஸ்தானும் செய்ததை போல, இஸ்ரேலும், ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். நான் வர்த்தகத்தை பயன்படுத்தியதால அந்த இரு நாடுகளின் சிறந்த தலைவர்களும் போரை நிறுத்துவதென ஒரு முடிவுக்கு வந்தனர். இதுமட்டுமின்றி, செர்பியா-கொசோவோ, எகிப்து-எத்தியோப்பியா போன்ற பல நாடுகள் இடையேயான நீண்ட நாள் மோதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அதே போல, இஸ்ரேல், ஈரான் இடையேயும் அமைதியை கொண்டு வருவோம். அதற்கான நிறைய அழைப்புகள், சந்திப்புகள் நடக்கின்றன. இதுபோல, நிறைய நல்ல விஷயங்களை நான் செய்கிறேன். ஆனால் அதற்கான பாராட்டுகள் எனக்கு கிடைப்பதில்லை. பரவாயில்லை, மக்கள் புரிந்து கொள்வார்கள். மத்திய கிழக்கை மீண்டும் சிறந்ததாக ஆக்குவோம்’’’ என கூறி உள்ளார்.
இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஈரானில் உள்ள இந்தியர்கள் பீதி அடைய வேண்டாம். உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இஸ்ரேலில் அனைத்து இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாகவும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை குறிவைத்தால் அவ்வளவுதான்
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே பழிவாங்கும் விதமாக அமெரிக்காவை குறிவைக்க வேண்டாம். எந்த வகையிலும், வடிவத்திலும் ஈரான் அமெரிக்காவை குறிவைத்தால், எங்களின் முழு பலத்தையும் காட்டுவோம். இதற்கு முன் பார்க்காத பயங்கரத்தை பார்க்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
The post ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல்; பற்றி எரியும் எண்ணெய் கிணறுகள்: இரு நாடுகளும் சளைக்காமல் தாக்குதலை தொடர்வதால் உக்கிரமடையும் போர் appeared first on Dinakaran.