சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அங்கு இரண்டு குள்ளநரிகள் வசிப்பதை கண்டறிந்துள்ளனர். வாகன இரைச்சல் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கான்கிரீட் காடாக திகழும் சென்னை நகரில் பசுமைப் பகுதி ஒன்று மிஞ்சியிருப்பதும் அதில் உயிரினங்கள் பல வசிப்பதும் ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய ஈரநில பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டம்(NWCMP) மூலம் நாடு முழுவதும் கண்டறியப்பட்ட 94 ஈர நிலங்களில் சென்னை பள்ளிக்கரணையும் ஒன்று. தமிழகத்தில் உள்ள மூன்று ஈர நிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ராம்சார் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஈர நிலம் பல வகைகளில் மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் பயன்படுகிறது. இங்கு பல ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வருகின்றன. பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைக் காட்டிலும் அதிக பறவைகள் இங்கு வசிப்பதும், வந்து செல்வதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.