*கடந்தாண்டை விட விலை சற்று குறைவு
தஞ்சாவூர் : தஞ்சை அருகே புதுக்குடி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் முடிந்து காயவைத்து விற்பனை செய்வதில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
இதனால் அடர் தீவனங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது என்பது குறிப்பிடத்தது. இதனால் மக்காச்சோள சாகுபடியில் தஞ்சை பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முக்கியமாக மானாவரி பகுதியில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை மேற்கொள்கின்றனர். காரணம் குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு என்ற அளவில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடியும் நடந்து வருகிறது. மக்காச்சோளத்தை எளிதமாக விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.அந்த வகையில் தஞ்சை அருகே புதுக்குடி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சோளக்கதிர்கள் முற்றி அறுவடை முடிந்துள்ளது.வயலில் அறுவடை செய்த சோளத்தை தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களில் காயவைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அறுவடை செய்த மக்காச்சோளத்தை காய வைத்தவுடன் நேரடியாக அப்பகுதிக்கே வந்து பிற மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த முறை சாகுபடியின் போது கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது சோளம் கிலோ ரூ.23க்கு வாங்கி செல்கின்றனர்.
தற்போது சற்று விலை குறைந்திருந்தாலும் காத்திருந்து விற்பனை செய்வதற்கு அவசியமின்றி வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து உடனடியாக பணத்தை தந்து விடுகின்றனர். இதனால் அறுவடை முடிந்த ஓரிரு நாட்களிலேயே பணம் கிடைத்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாக்ஸ்-மக்காச்சோளம் அறுவடை முடிந்து காயவைக்கும் இடத்திலேயே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து விடுகின்றனர். ஆனால் நிலையான விலை இல்லாமல் அவ்வப்போது ஏற்ற இறக்கமாக உள்ளது. இருப்பினும் உடனுக்குடன் பணம் கிடைத்து விடுகிறது. இதனால் செலவு போக நல்ல லாபம் கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.
The post உடனடி வருவாய் தரும் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் appeared first on Dinakaran.