நீலகிரி: உதகையில் மலைவீட்டின் அருகே மண்சரிவு வீட்டின் அடியில் இருந்த மண் அரிக்கப்பட்டதால் வீடு அந்தரத்தில் தொங்கியது. பயன்பாட்டுக்கு இல்லாத இடம் என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கூடலூர், பந்தலூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் சரிந்து விழுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் குழுவினர் மற்றும் மாநில மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை உதகையிலிருந்து கோத்தகிரி செல்லக்கூடிய பகுதியில் ஒரு மலைவீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டடு வீடு அந்தரத்தில் தொங்கியது.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த 4 பேர் உடனடியாக வேறு இடத்திற்கு சென்றதனால் தப்பித்தனர். உதகையில் எல்கஹில் என்ற பகுதியில் 50மீ நீளம் கொண்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் மழை பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீர் செய்து வருகிறது.
நீலகிரியில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
The post உதகையில் மலைவீட்டின் அருகே மண்சரிவு வீட்டின் அடியில் இருந்த மண் அரிக்கப்பட்டதால் அந்தரத்தில் தொங்கும் வீடு! appeared first on Dinakaran.