மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமம் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய பகுதியாக நீடித்துவருகிறது. அங்கு 600 மீட்டர் நீளம் 12 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இடிக்கப்பட்டதில் இருந்தே அப்பகுதி தமிழகம் முழுவதும் பிரபலம். தமிழகத்தின் ஒரு கிராமம் நல்ல விஷயத்திற்காக பிரபலமாக இருந்தால் அதற்காக பெருமைப்படலாம்.
ஆனால், தீண்டாமை, சாதி பாகுபாடு உள்ளிட்ட பிற்போக்கான விஷயங்களுக்காக பிரபலமடையும்போது தமிழர்கள் அனைவருமே தலைகுனியும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சுவர் விவகாரம் முடிந்தபின், அங்குள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில், ஸ்ரீமுத்தாலம்மன் கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட அனுமதிப்பதில்லை என்ற விவகாரம் கிளம்பியது.