புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமோலி மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான மனா அருகே வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) எனும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடத் தொடங்கியது. மீட்புப் பணி தொடர்பாக பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சமோலியில் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பணியாளர்கள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். மீதமுள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் ஐடிபிபி (ITBP) மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.