உலக அரசியலில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது. அச்சு நாடுகள் என்று சொல்லக் கூடிய ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் ஒரு பக்கமும், நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்க போன்ற நாடுகள் மற்றொரு பக்கமுமாக நின்று போரிட்டன.
போரின் உச்சமாக ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை அமெரிக்கா வீசியது. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா மீதும், ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்த அணுகுண்டு வீச்சுகள் பேரழிவை ஏற்படுத்தின, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுகள் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு முக்கிய காரணமாக அமைந்தன, அச்சு நாடுகள் தோல்வியைத் தழுவின.