சென்னை: சென்னை, தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (10.6.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை (Global Business Centre) திறந்து வைத்தார். கடந்த 2001-ஆம் ஆண்டு 70 அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் நிறுவப்பட்ட சென்னை உலகளாவிய வணிக மையம் (Global Business Centre) விரிவாக்கப்பட்ட போது செப்டம்பர் 2006-ல் தரமணியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது மார்ச் 2025-ன்படி 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு, உலகளவில் 130-க்கும் மேற்பட்ட உலக வங்கி அலுவலகங்களின் மூலம், 189 உறுப்பு நாடுகளுக்குச் சேவை செய்யும் ஒரு முக்கிய உலகளாவிய மையமாக வளர்ந்துள்ளது. அதன் திறமைமிக்க குழு, வலுவான உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர் நட்பு நிர்வாகம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, தீவிரமான உலகளாவிய
தேடலுக்குப் பிறகு, சென்னை மையம் உலக வங்கிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆண்டுகளில், தமிழ்நாட்டுப் பணியாளர்களின் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் மீள்தன்மை மூலம், சென்னை உலகளாவிய வணிக மையம் உலக வங்கிக் குழுமத்தின் பல நிறுவன செயல்பாடுகளை ஆதரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த தரமணி மையம் புதிய ஒத்துழைப்பு மண்டலங்கள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் கூடிய அதிநவீன வசதியை வழங்குகிறது.
உலக வங்கி குழுமத்தின் முக்கிய செயல்பாடுகளை ஆதரிப்பதில் சென்னை உலகளாவிய வணிக மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. LEED பிளாட்டினம் சான்றிதழ் மூலம் காலநிலை மீள் கட்டமைப்புக்கு ஆதரவளித்து, சூரிய மின்சக்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளும் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
நிதி, கணக்கியல், கொள்முதல், நிர்வாகம், அறிவு மேலாண்மை, கருவூலம், மனித வளங்கள், இடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு களங்களில் அத்தியாவசிய நிறுவன சேவைகளை இந்த மையம் தொடர்ந்து வழங்கும்.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் முனைவர் டி.வி. சோமநாதன்,தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் வென்காய் ஜாங், உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் அகஸ்டே டானோ கோமே, சென்னை மையத் தலைவர் சுனில் குமார், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், உலக வங்கியின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.