அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள மில்கிபூரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதே அயோத்தியின் ஃபைசாபாத் தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தனித்தொகுதியான மில்கிபூரில் பாஜக சார்பில், சந்திரபானு பஸ்வானும், சமாஜ்வாதி கட்சி சார்பில் அஜித் பிரசாத்தும் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவதேஷ் பிரசாத், கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஃபைசாபாத்தில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளரான லல்லு சிங்கை, 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.