புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மாதத்தில் முஸ்லிம் கைதிகள் ஐந்து வேளை தொழுகை நடத்த அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.யின் எட்டவாவிலுள்ள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஃபர்ஹாம் அகமது. இவரது மனைவி உஸ்மா ஆபித் உ.பி.யின் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியான நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் நந்த் பிரபா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ஓர் உயர்மட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதியை, ரமலான் மாதத்தில் தனது மதக் கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். இதன்படி, ஐந்து முறை தினசரி தொழுகை நடத்தவும், அந்த கைதி தன்னுடன் குர்ஆனை வைத்திருக்வும் அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.