ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்பாட் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளை கண்டு ரசிக்கின்றனர். மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பூங்கா முழுவதும் மலர்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது. கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க அங்காங்கே பூங்கா நிர்வாகம் மலர் தொட்டிகளை கொண்டு செல்பி ஸ்பாட் மற்றும் பிரமீடு போன்ற அலங்காரங்களை அமைத்துள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத நிலையில், இந்த செல்பி ஸ்பாட் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, இத்தாலியன் பூங்கா அருகே உள்ள ‘செல்பி ஸ்பாட்’ மேரி கோல்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் ஆவலுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளால் ‘செல்பி ஸ்பாட்’ appeared first on Dinakaran.