சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்தக்கோரி தன்னாட்சி அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கிராமங்களுக்கு வளர்ச்சியை கொண்டு வரவும், ஊராட்சிகளின் பணிகள் தொடரவும், ஏழை, எளிய கிராம மக்களுக்கு திட்டங்கள் முறையாக கிடைக்கவும், மக்கள் பங்கேற்புடன் கிராம சபைகள் முறையாக நடக்கவும் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தன்னாட்சி, அறப்போர், மக்களின் குரல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் குறித்து தன்னாட்சி மக்கள் இயக்கத்தின் துணை தலைவர் நந்தகுமார் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் தேர்தல் நடந்த 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை 2025 ஜனவரி 5-ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்க வேண்டும்.