புதுடெல்லி: ஊழலை மறைக்க சிலர் மொழிப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள் என்று மாநிலங்களவையில் குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம்” என்று கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விளக்கம் அளித்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பயங்கரவாதம், ஜம்மு காஷ்மீர், நக்சலிசம், மொழிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பேசியது: “உள்துறை அமைச்சகத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை மாநில வரம்புக்கு உட்பட்டது. அதேநேரத்தில், போதைப்பொருள் கடத்தல், ஹவாலா உள்ளிட்ட சில பிரச்சினைகள் மாநில எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இதைச் சமாளிக்க, உள்துறை அமைச்சகத்தில் மாற்றம் அவசியமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள், பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்டுள்ளன.