எகிப்து: எகிப்து நாட்டில் ஆழ்கடல் சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் நீர்மூழ்கி மூழ்கி கப்பலில் பயணித்து ஆழ்கடலின் அழகினை கண்டு ரசிப்பது வாடிக்கை இதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய வகை நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயணித்து செங்கடலில் சுமார் 70 அடி ஆழம் வரை சென்று கண்கவர் பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில் நேற்று ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு நீர்மூழ்கி கப்பல் செங்கடல் கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. சிந்துபாத் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த நீர்மூழ்கி கப்பலில் பணியாளர்கள் தவிர 45 ரஷ்ய சுற்றுலா பயணிகள் இருந்தனர். இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல் திடீரென விபத்துக்குள்ளானது. கப்பல் சிப்பந்திகள் தகவலை அடுத்து விரைந்த எகிப்து ஆழ்கடல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீவிர முயற்சிகளுக்கு பிறகு சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இருந்து 39 பயணிகளை வீரர்கள் மீட்டனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து எகிப்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post எகிப்து நாட்டில் விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பல் : ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.