2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி என அனைத்துக் கட்சிகளும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கைகோத்து தனி அணி கண்டன. அப்போது ஓடோடி வந்து அதிமுக-வுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சி தேமுதிக. அப்படி இக்கட்டான நேரத்தில் தங்களுக்கு தோள் கொடுத்த தேமுதிக-வை தற்போது மிக எளிதாக ஒதுக்கித் தள்ள துணிந்திருக்கிறது அதிமுக தலைமை.
நெருக்கடியான நேரத்தில் நேசக்கரம் நீட்டிய தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக விட்டுக் கொடுக்கும், 2026-ல் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்றெல்லாம் கடந்த ஓராண்டாக மலைபோல் நம்பிக் கொண்டிருந்த தேமுதிக-வுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தது போல், “நாங்கள் எப்போது அவர்களுக்கு ராஜ்யசபா சீட் தருவதாகச் சொன்னோம்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.