சென்னை: இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தப் படம் எந்திரன். மிகப்பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் ரூ. 290 கோடி வசூல் செய்தது.ஆனால், எந்திரன் படத்தின் கதை தன்னுடைய புத்தகத்தின் கதை என அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2011ம் ஆண்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஜூகிபா புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், ‘எனது கதையைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது காப்புரிமை சட்டம் 1957 மற்றும் ஐபிசி 1860 ஆகியவற்றை மீறிய குற்றம்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘எந்திரன்’ படத்தின் கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துக்களை பிப்ரவரி. 17ம் தேதி அமலாக்கத் துறை முடக்கியது. அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தனிநபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துக்களை முடக்கியிருக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமலாக்கத் துறை ஏப்ரல் 21க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post எந்திரன் பட கதை காப்புரிமை மீறல் விவகாரம்; இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.