தன்னுடைய அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டு அமைச்சர்கள் தனக்கு தொல்லை தருவதாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான சந்திர பிரியங்கா சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோவால் பரபரத்துக் கிடக்கிறது புதுச்சேரி ஆளும் கூட்டணி வட்டாரம்.
2021-ல் காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருமுருகன், சந்திர பிரியங்கா ஆகிய இருவரும் வெற்றிபெற்றனர். இருவருமே அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில், சந்திர பிரியங்காவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இதையடுத்து, சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்களும் திருமுருகனின் ஆதரவாளர்களுக்கும் ஃபிளெக்ஸ் வைப்பது தொடங்கி அனைத்திலும் முட்டிக் கொண்டனர். இந்த நிலையில், திடீரென 2023 அக்டோபரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா, “தொடர்ச்சியாக சாதிய ரீதியிலும் பாலியல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகி வந்த நான் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து பதவி விலகுகிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை பற்றவைத்தார்.