‘‘என் அரசியல் வாழ்க்கையில் பழிவாங்கும் எண்ணத்திற்கு இடமில்லை’’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டம்-ஒழுங்கு குறித்து பேசியதாவது: கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில், விஜயவாடாவில் தெலுங்கு தேசம் அலுவலகம் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் தாக்குதல் நடத்தினர். ஆனால் இது தொடர்பாக அப்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜனநாயகத்தில் யாருடைய கட்சி அலுவலகமும் தாக்கப்பட வில்லை. ஆனால், அது ஜெகன் ஆட்சியில் நடந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் பார்த்து கொண்டு இருக்க முடியாது. சிலர் கஞ்சா, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ‘ஈகல்’ எனும் போதை தடுப்பு பிரிவு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.