தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், ‘உடன்பிறப்பே வா’ சந்திப்புக்காக அறிவாலயம் வந்து திமுக தலைவரை சந்தித்த மதுரை உடன் பிறப்புகள், “மேயர் இந்திராணியை மாற்றாவிட்டால் சிக்கலாகும்” என்று மதுரை மேயருக்கு எதிராக புகார் மழை பொழிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
முதல்வரைச் சந்தித்து மதுரை நிலவரத்தை முறையிட்ட திமுக நிர்வாகிகள் தரப்பில் சிலரிடம் பேசினோம். “இந்த சந்திப்பின் போது மதுரை மாநகர பகுதிச் செயலாளர் ஒருவரிடம் தலைவர் ஸ்டாலின் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேட்டிருக்கிறார். அவர், எதற்கு பொல்லாப்பு என நினைத்து, ‘மதுரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பா செயல்படுது தலைவரே’ என்று சொல்லி இருக்கிறார்.