ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து இந்தியா, கனடா உறவு சிதைந்து விட்டது. நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.இதை இந்தியா மறுத்தது. தற்போது அவர் பதவி விலகி விட்டார். புதிய பிரதமராக மார்க் கார்னே பதவி ஏற்றார்.
அதை தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அடுத்த மாதம் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தலையிட வாய்ப்பு உள்ளதாக கனடா உளவுப்பிரிவு அமைப்பான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை இயக்குனர் வனேசா லாயிட் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,’கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கமும் அதற்கான திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
அதே போல் இந்த தேர்தல்களில் ஏஐ டூல்களை சீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது. ரஷ்யா மற்றும் பாகிஸ்தானும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிடலாம். வெளிநாட்டு குறுக்கீடு நடவடிக்கைகளை கண்டறிவது இன்னும் சவாலானது. சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் ரஷ்யா ஊடுருவலாம். இதற்கான சாத்தியம் உள்ளது. அதே போல் பாகிஸ்தானும் தனது நோக்கங்களுக்காக கனடா தேர்தலில் தலையிட சாத்தியம் உள்ளது’ என்றார்.
The post ஏப்.28ம் தேதி நடக்கும் கனடா தேர்தலில் இந்தியா தலையிடலாம்: உளவுப்பிரிவு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.