அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம், இந்தியாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் இப்படி ஒரு கோர விபத்து நேர்ந்ததில்லை என்னும் அளவுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவது அவசியம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள காட்விக் விமான நிலையம் நோக்கி, ஜூன் 12 அன்று கிளம்பிய ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில வினாடிகளில் மேகானிநகர் பகுதியில் உள்ள குஜராத் அரசின் எம்ஜே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்து தீப்பிடித்தது.