புதுடெல்லி: ஏ.சி., எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு மீண்டும் இன்று தொடங்குகிறது. ஏ.சி., எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள் (ஒயிட் பொருட்கள்) தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ஏப்ரல் 16-ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் அதிக அளவில் இத்துறையில் முதலீட்டை ஈர்க்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. ரூ.6,238 கோடியில் 7 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதுவரை இந்த திட்டத்துக்காக 83 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.