கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஜெர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இச்சாகுபடி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நல்ல மண்வளம் மற்றும் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், மலர் மற்றும் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.