2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக எல்லைக்குள் உள்ள விருதுநகர் தொகுதியில் மாஃபா பாண்டியராஜனும், ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான கோபால்சாமியும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள். இவர்கள் இருவரையுமே தனக்கு ஆகாது என்பதால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க ஆயத்தமாகி வருகிறார் ராஜேந்திர பாலாஜி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர், “மாஃபா பாண்டியராஜன் சென்னையை விட்டுவிட்டு மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு திரும்பியது ராஜேந்திர பாலாஜிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் அவருக்கு எதிராக பொதுவெளியிலேயே வார்த்தைகளில் மறைமுகமாக வெடித்தார் பாலாஜி. இது தொடர்பாக கட்சித் தலைமை அவரை அழைத்து கண்டித்ததும், ‘நான் பாண்டியராஜனைக் குறிப்பிட்டுப் பேசவில்லை’ என மறுத்தார். பாலாஜி இப்படி மிரட்டல் தொனியில் பேசியது பாண்டியராஜனுக்கு தொழில் ரீதியாகவும் சில சங்கடங்களை ஏற்படுத்தியது.