ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்வது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டையன் தனது மனச்சுமையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் சிறந்த கட்சி விசுவாசி. விருப்பு, வெறுப்பின்றிப் பணியாற்றுபவர்.
அதிமுகவில் பழனிசாமி ஒற்றைத் தலைமையாக மாறிய பிறகு வந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது. இதனால் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அனைவரும் இணைந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருமே இருமொழிக் கொள்கையை ஏற்றவர்கள். எனவே, யாரும் புதிதாக பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம். அதிமுகவில் ஜெயக்குமார் நகைச்சுவை அரசியல்வாதி. இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.