மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை என்றால், தாமாக இழப்பீடு வழங்கும் சேவையை செயல்படுத்த வேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மின்வாரியம் இதுவரை செயல்படுத்தவில்லை.
புதிய மின்இணைப்பு, குறைபாடு உடைய மீட்டரை மாற்றுவது, மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து தரும் வகையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை எனில் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி இழப்பீட்டை மின்வாரியம் நுகர்வோருக்கு தர வேண்டும். அதன்படி, தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 என அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். இது ஒவ்வொரு சேவைக்கும் மாறுபடும்.