ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி ஆறு மற்றும் ஈர நிலப்பகுதிகளில் வலசை வந்துள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், பிலுகுண்டுலு, ராசிமணல் பகுதியைப் பட்டாம்பூச்சிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் வனக்கோட்டம் 1,492 சகிமீ பரப்பளவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள் மற்றும் வனவிலங்குகள், 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள், அழிந்து வரும் அரியவகை பட்டாம் பூச்சிகள் உள்ளன. இந்த வனப் பகுதியின் மையப் பகுதியில் காவிரி ஆறு பாய்வதால், வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.