சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதாக விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்யுமாறு விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தை விஷால் செலுத்தவில்லை. சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் நேரில் ஆஜராகுமாறு விஷாலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவரும் நேரில் ஆஜரானார்.
அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார். 3 கார்கள், ஒரு பைக் தொடர்பான ஆவணங்கள், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் விஷால் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பு வழங்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்குமாறு விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.
The post கடன் வாங்கிய விவகாரத்தில் லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.