பெரும் பயணங்கள் சிறிய அடிவைப்புகளில் தான் தொடங்குகின்றன. இது ஒரு சீனப் பழமொழி. இந்த அடிவைப்பு நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் அமையலாம். டிரான்ஸ்வேர்ல்ட் (Transworld) நிறுவனத்தின் தொடக்கம் அப்படித்தான் அமைந்தது. 1999ஆம் ஆண்டு கடல்வழி சரக்குப் போக்கு வரத்திற்காக, சிங்கப்பூரின் ஆன்சன் வீதியில் நான்கு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று 11 நாடுகளில் பரந்திருக்கிறது. ஊழியர்கள்: 2000 பேர். மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3,500 கோடி).
மகேஷ் சிவசாமிக்கு இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோதே இதன் வளர்ச்சியைக் குறித்த தொலை நோக்கு இருந்திருக்கும். அவரது தந்தை ஆர்.சிவசாமி எழுபதுகளில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். 1977இல் அதன் தலைமையகத்தை துபாய்க்கு மாற்றினார். வணிகம் வளர்ந்தது. 1989இல் அவர் எதிர்பாராத விதமாக இறந்து போனார். தனயன் ராமகிருஷ்ணன் சிவசாமி பொறுப்பேற்றார். வணிகம் மேலும் வளர்ந்தது.