சென்னை: கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டத்தினை ன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜுன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ஆம் தேதி முதல் ஜுலை 31ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களுக்கு தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 18.08.2023 அன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது ரூ.5,000-லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. நடப்பாண்டின் மீன்பிடி தடைக்காலத்தில் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 இலட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.8,000 வீதம் வழங்கிடும் பொருட்டு, அரசு ரூ.140.07 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்திடும் முகமாக 20.05.2025 அன்று சென்னை, நந்தனத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 கடலோர மாவட்டங்களை சேர்ந்த தலா 10 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசுச் செயலாளர் டாக்டர் ந.சுப்பையன், இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி, இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.