
சபரிமலை: சபரிமலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பாட் புக்கிங்கில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு பம்பை, மரக்கூடம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்படுகின்றனர். 6 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவரை குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் பக்தர்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இத்துடன் கடும் நெரிசலும் ஏற்படுவதால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

