கர்நாடகாவில் விளையும் மாம்பழங்களை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதற்கு ஆந்திரா தடை விதித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் விளையும் தோத்தாபுரி மாம்பழங்கள், கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை விலைபோனது.
இந்த ஆண்டு விலை சரிந்து ரூ.12 ஆயிரமாக குறைந்தது. கிலோ ரூ.5 என்ற அளவில் விற்பனையானதால் ஆந்திர விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அதை சமாளிக்க ஆந்திர மாநில அரசு தோத்தாபுரி மாம்பழத்தின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.8 என நிர்ணயித்து, ரூ.4 மானியமும் வழங்கியதால் ஆந்திர விவசாயிகளுக்கு ரூ.12 கிடைத்துள்ளது. இந்தநிலையில், கர்நாடக மாம்பழங்களின் வருகை ஆந்திர மாநில மாம்பழ விவசாயிகளை பாதிப்படைய செய்துள்ளதால், அவர்களைக் காப்பாற்ற கர்நாடக மாம்பழங்களுக்கு சித்தூர் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.