பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு விசாரணை பிரிவு போலீஸார் இவ்வழக்கில் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.