‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தருவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் திட்டத்தில், குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதற்காக 2024-25-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏழைகள், வீடற்றவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அரசு விதிகளை வகுத்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி உதவி பொறியாளர்கள், வட்டார பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.