சென்னை: கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதிவாய்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வோர் ஆண்டும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதிகள்:
* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும்.
* பத்திரிகை பணியை முழுநேர பணியாக கொண்டிருக்க வேண்டும்
* இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
* விண்ணப்பதாரர்களில் ஒருவரே விருதாளராக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
இந்த தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமை செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு 30.04.2025-க்குள்ளாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.