திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பாரதி மண்டபம் அமைப்பதற்கு ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி பெருமுயற்சி எடுத்தார். இந்நிலையில், எட்டையபுரம் மகாராஜாவிடம் இதுகுறித்து ரசிகமணி டி.கே.சி. எடுத்துரைத்து பாரதி மண்டபம் அமைவதற்கான இடத்தைப் பெற்றார். ஆனால், அந்த இடமோ மழை பெய்தால் முழங்கால் அளவு மண்ணுக்குள் புதையும் இடமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்தில் பாரதி மண்டபம் அமைக்கப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு, விழா எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்…
எட்டையபுரம் பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பில் 1944 செப்டம்பர் மாதத்தில் டி.கே.சி. தலைமையில் நடைபெற்ற தமிழிசை விழாவில் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். அம்மன்றத்தை ஆசிரியர் கே.பி.எஸ்.நாராயணன், எட்டையபுரம் ஜமீன்தாரின் மைத்துனர் அமிர்தசாமி ஆகியோர் நடத்தி வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பும் வழியில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியிடம், ‘எட்டையபுரத்தில் பாரதி பெயரில் ஒரு நூல் நிலையம் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.