திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றபோது சைக்கிள் மீது டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (55). இவர், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் தங்கியிருந்தார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (47). சமையல் வேலை உள்ளிட்ட கிடைத்த வேலையை செய்து வந்தனர். அதன்படி இருவரும் இன்று காலை சமையல் வேலைக்காக சைக்கிளில் புறப்பட்டனர்.
வாயலூர் அருகே இசிஆர் சாலையை கடக்க முயன்ற போது ரசாயனம் ஏற்றி கொண்டு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே கண்ணன் துடி,துடித்து இறந்தார். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த துரையை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே துரை பரிதாபமாக உயிரிழந்தார்.
இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ரசாயன டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்து ரசாயன புகை வெளியேறியதால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிழ்ந்த சாலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கல்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றபோது சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; 2 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.