தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன. தமிழ் பாடத்துடன் துவங்கியுள்ள தேர்வு 25-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். உயர் கல்விக்குள் நுழைவதற்கான முக்கியமான தேர்வு என்பதால் 12-ம் வகுப்பு தேர்வுக்கு தமிழகத்தில் இல்லந்தோறும் அளிக்கும் முக்கியத்துவம் வேறு எங்கும் காண முடியாதது.
பல்வேறு பணிகளில் இருக்கும் பெற்றோர் கூட தங்கள் பிள்ளைகள் 12-ம் வகுப்புக்கு வந்துவிட்டால், பணி மாறுதல், இட மாறுதல் பெற்றுக் கொண்டு பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையே தமிழகத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்த ரித்திகா (17) என்ற மாணவியின் தந்தை உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அந்த சோகத்திற்கு மத்தியிலும் அந்த மாணவி சீருடையை அணிந்து கொண்டு தேர்வுக் கூடத்திற்கு வந்து 12-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ள காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.