சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீதம் தொகையை ஒன்றிய அரசும், 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு, கடந்த 2021ம் கல்வியாண்டு முதல் 2021ம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. 100 சதவீதம் தொகையை மாநில அரசு தான் வழங்கியுள்ளது.
மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் பள்ளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றனர். அதற்கு, ஒன்றிய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் நீதிபதிகளிடம் கேட்டார்.
அப்போது, ஒன்றிய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் பாபு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்று கேட்டனர்.
அதற்கு, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று தள்ளி வைத்தனர்.
The post கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25% ஒதுக்கீடுக்கு தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு?: ஒன்றிய அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.